Popular Posts

Monday, October 11, 2010

நிலவை..சூரியனை உடைத்து...

பிரித்துப்பார்..
என்று-
கோஷம் போட்டோம்
பிரித்தார்கள்!

உடைக்காதே என்று
உரக்கக் கத்தினோம்
உடைத்தார்கள்!

மக்களுக்கு ..
வெளிச்ச வாழ்வைக்
கொடு என்று
கோரிக்கை வைத்தோம்!

இருட்டை-
இனாமாகத் தந்தார்கள்!

நிலவை..
சூரியனை..
உடைத்து
வெளிச்சத்தைப்..
பங்கிட்டுத் தரவும்-
வியாக்கியானம் செய்தார்கள்!

விரும்பிய மட்டும்
கிடைக்காமலே
விலகியிருக்கிறது
(எ)இப்பவும் தான்
மின்சாரம்!

ஐந்திணை ரகசியம்

காலச் சக்கரம்
சுழன்று திரிந்தது
கன்னித் தீவெங்கும்
கர்ப்பமானது
குறிஞ்சித்திணை!

யுகங்களாய்
சுவாசித்துக்கொண்டிருக்கிறது
பூமிக்குள்ளும்
காற்றின் வேர்கள்
பசுமை வளர்த்த தாயகமாய்
முல்லைத்திணை!

புசித்த நோய்க்கு
பசிப்பிணி போக்க
சஞ்சீவி தயாரிக்கும்
உற்பத்திக்கூடமானது
வயல்வெளிகள்
மருதத்திணை!

4ல்3பங்கு
நீருலகு இருந்தாலும்
குடிநீர் விலை என்னவோ
பாலையும் மிஞ்சுகிறது
தொடு வானத்தின்
சூட்சுமம்
புரிந்து கொள்ள முடியாமல்
அணைத்துக்கொள்கிறது கடல்
நெய்தல் திணை!

வாழ்விடமற்ற
நோஞ்சான் நோயாளி..
வயோதிகர்கள்..
தேடித்திரிந்தும்
தாகம் தணிக்காது
வாழ்க்கைக்கு அப்பாலும்
விரிந்த நிலமாய்
பாலை!

பஞ்ச பூதங்களின்
சுவாச மண்டலமாய்
எப்போதும் இருக்கிறது
வாழ்வியலோடு
ஐந்திணை!